Pages

Friday, April 25, 2014

வனத் தோகை மயிலே !!

வனத் தோகை மயிலே !!
உன் மேலமர்ந்த
மால் மருகன் முருகன்
புகழ் பாட
வந்திடுவாய் . என் நெஞ்சில்
நின்றிடுவாய். மயிலே..

ஆறாத துயரத்திலே அமிழ்ந்திருந்தேன்.
ஆறு படை வீடு எல்லாம் சுற்றி வந்தேன்.
ஏறாத மலை எல்லாம் ஏறி நின்றேன்.
ஏங்கி நின்றேன் என் முருகன் எங்கு என்றேன் ....வனத் தோகை மயிலே !!

வயலுர் விராலிமலை வலம் வந்தேன்.
வழியிலே மயிலே !! உனைக் கண்டு நின்றேன்.
உன் மேல் அமர்ந்து சென்ற முருகன் அவன்
உலகம் சுற்றியபின் எங்கு சென்றான் ?,,,வனத் தோகை மயிலே !!

சூரனை வதைத்திடவே  செந்தூர் சென்றானோ ?
ஊர் உலகம் சுற்றியபின் பழனி சென்று   அமர்ந்தானோ
வள்ளிதனைக் காணவே வனப் பக்கம் சென்றானோ ?
வேதப்பொருள் சொல்லிடவே வேரகம்  நின்றானோ. '.

..வனத் தோகை மயிலே !!

தனக்கெனவே காத்திருக்கும் தெய்வானை மணமுடிக்க
தாலிச் சரடுடனே பரங்குன்றம் விரைந்தானோ ?
காடு மலை சுற்றியபின்  தணிகை மலை அடைந்தானோ
காவடிகள் கூடச் சென்று கதிர்காமம் கண்டானோ
 வனத் தோகை மயிலே !!

கண்டி செல்கையிலே காணும் வழி எல்லாம்
கண்டிரா கொடுமைகள் கண்டு மனம் நொந்தானோ ?
தனக்கென தேசம் இல்லா தமிழருக்கோர் வாழ்வளிக்க
வேலுடனே வந்து அவன் வழி ஒன்று சொல்வானோ ?
வனத் தோகை மயிலே !!